26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசலை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்

மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசலை மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினர், கடந்த வாரம் நீதி அமைச்சில், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில், மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உள்ளிட்ட மூன்று பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, குறித்த குழுவினர், நூறு வருடங்களுக்கும் மேலாக பழமைவாய்ந்த குறித்த பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன், அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு, சமய வழிபாடுகள் நடைபெறுவதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். அத்துடன், முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாசலை மீளவும் சிறைச்சாலை நிர்வாகத்திடமிருந்து விடுவித்துத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து, அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இப்பள்ளிவாசலைப் பயன்படுத்துவதை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்திருந்தது. அவசரகாலச் சட்டம் முடிந்ததும் இப்பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்படவில்லை. காலாகாலமாக மூடியிருந்ததாகக் கூறி பொய்க் காரணங்களைக் காட்டி, சிறைச்சாலை அதிகாரிகள் இதனை ஓய்வு அறையாக மாற்றியுள்ளமை, சட்டத்துக்கு முரணானதாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, ஜும்ஆப் பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமுகமான தீர்வைப் பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா குழுவினரிடம் உறுதியளித்திருந்த நிலையிலேயே, இப்பள்ளிவாசலை மீளவும் உரிய நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தைப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசலை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு