சீனாவின் 'சினோபெக் லங்கா' நிறுவனம் மத்தேகொடவில் அமைந்துள்ள அதன் எரிபொருள் நிரப்புநிலையத்தின் ஊடாக நேற்று புதன்கிழமை (30) தமது வணிக மற்றும் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. இது இலங்கையின் சக்திவலுத்துறை விரிவாக்கத்தில் மிகமுக்கிய நகர்வாக அமைந்துள்ளது.
அதன்படி சினோபெக் நிறுவனமானது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு லீற்றர் ஒன்றுக்கு 3 ரூபா விலைக்கழிவை வழங்குவதன் ஊடாக அதன் சந்தை விளம்பரப்படுத்தலை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் 150 எரிபொருள் நிரப்புநிலையங்களை சினோபெக் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதே அடுத்தகட்ட விநியோகத்திட்டமாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் கடந்த மேமாதம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சினோபெக் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. அதன்மூலம் இலங்கையில் 150 எரிபொருள் நிரப்புநிலையங்களின் ஊடாக 20 வருடங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி சினோபெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சினோபெக் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் 'எமது முதலாவது எரிபொருள் நிரப்புநிலையத்தின் ஊடாக இலங்கையில் எம்முடைய வணிக மற்றும் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எவ்வித தடையுமின்றி சந்தைக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான கடப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..