லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு மையமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலைநகரில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி குறித்த தகவல் வெளிவந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவக்கூடிய இடமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் நிலக்கீழ் ரெயில் பயணிகளுக்கு அதில் பயணிக்கவேண்டாம் என இதுவரையில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் அரசாங்கத்தால் விடுக்கப்படவில்லை.
கொரோனா வைரஸால் ஏற்படும் COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைஸ் மற்றும் செயின்ற் தோமஸ் (Guy’s and St Thomas) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒன்பதாவது நோயாளி, சீனாவிலிருந்து லண்டனுக்கு வந்த ஒரு பெண் என்று நம்பப்படுகிறது.
நகரின் விரிவான போக்குவரத்து இணைப்புகளில் வைரஸ் பரவுவது அதிகரிக்கக்கூடும் என்ற கவலைகள் இப்போது அதிகரித்துள்ளன. ஆனால் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ரொபின் தொம்சன் கூறுகையில்; பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் செறிந்த பகுதியில் இருந்தால் அவரிடமிருந்து வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.
லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் செறிந்த ஒரு போக்குவரத்து மையமாக இருப்பதால் இதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பதாவது நோயாளி லண்டனில் இருந்ததால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவரால் அதிக ஆபத்து ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..