‘உலகளாவிய இந்தியச் சிந்தனை’ என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துகொண்டு இந்தியச் சிந்தனை பற்றிப் பேசினார். “வெறுப்பு, வன்முறை, முரண்பாடு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து விடுபட விரும்பும் உலகில், இந்திய வழிமுறைதான் நம்பிக்கை அளிக்கிறது. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தினால்தான் இந்திய நாகரிகம் வளர்ச்சியடைந்தது. முரண்பாடுகளைத் தவிர்க்கும் இந்தியாவின் வழி அடக்குமுறை அல்ல பேச்சுவார்த்தைதான்.
இந்தியர்களின் புதுமையான சிந்தனையும் அவர்கள் காட்டும் ஆர்வம், அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவைதான் உலகை இந்தியாவை நோக்கி ஈர்க்கிறது. இங்கு பல மொழிகள், பாரம்பர்யங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தாலும், பல நூறு ஆண்டுகளாக நாம் அமைதியாகவே வாழ்கிறோம். பல நாடுகளில் இன்னும் நாகரிகம் வளராதபோது நம் நாட்டில் மட்டும் எப்படி வளர்ந்தது. ஏனெனில், இங்கு அமைதி மற்றும் மத நல்லிணக்கம் உள்ளது. சிந்தனைகள், எளிமையான செயல்பாடுகளால் உருவாகும் பாரம்பர்யம் ஆகியவையே இந்தியாவின் மிகப்பெரும் பலமாக உள்ளது.
நாம் முன்னேறினால் உலகமும் முன்னேறும் என்று இந்தியா நம்புகிறது. அதேபோல் உலக நாடுகள் வளர்ச்சிபெறும்போதும் அதன் பலன் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. மக்களுக்கு எது நல்லதோ அதை ஏற்றுக்கொள்வதுதான் இந்தியப் பாரம்பர்யம். மாற்றுக் கருத்து மற்றும் மாற்றுச் சிந்தனைகளுக்கு மதிப்பளிப்பது இந்தியாவின் இயல்பு. இந்தியர்கள்தான் பூஜ்ஜியம் என்ற கணிதக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். இது, கணிதத்தின் புதிய படைப்புகளுக்கு வழிவகுத்தது.
0 Comments
No Comments Here ..