18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமத்துக்கான 'காட்டுப் பாதை' இன்று (12) திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'காட்டுப் பாதை' திறப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என்.டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர், ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்திரிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இன்று காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடத்தி ஆசியுரை வழங்கியதை தொடர்ந்து காலை 7 மணியளவில் காட்டுப் பாதையை கிழக்கு மாகாண ஆளுநர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததையடுத்து, முதல் நாளான இன்றே வரலாறு காணாத அளவுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையை ஆரம்பித்தனர்.


கதிர்காமத்துக்கான பாத யாத்திரையை வடக்கே யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் 6ஆம் திகதி வேல்சாமி தலைமையில் பாத யாத்திரை அடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரம்பித்து நேற்று முன்தினம் உகந்தையை சென்றடைந்த நிலையில், இன்று அங்கிருந்து கதிர்காமத்துக்கான 56 மைல் தூரம் கொண்ட காட்டுப் பாதை வழியே பயணத்தை ஆரம்பித்தனர்.


இந்த காட்டுப் பாதை உகந்தையிலிருந்து 5 மைல் தூரத்தில் வாகூரவட்டை, பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு, 12 மைல் தூரத்தில் நாவலடி, பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை, 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு, 8 மைல் தூரத்தில் கட்டகாமம், அடுத்த 8 மைல் தூரத்தில் கதிர்காமம் வரையிலான 56 மைல்களை சுமார் 6 நாட்கள் பாத யாத்திரையை மேற்கொண்டு எதிர்வரும் 19ஆம் திகதி கதிர்காம கொடியேற்ற தினத்தை பக்தர்கள் சென்றடைவர்.


இவ்வருடம் காட்டுப் பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் முதல் நாளான இன்றே சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாத யாத்திரீகர்கள் பயணித்துள்ளனர்.


இதேவேளை இன்று திறக்கப்பட்ட காட்டுப் பாதை எதிர்வரும் 25ஆம் தேதி மூடப்படும் என்பதுடன், கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், ஜூலை மாதம் 4ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறவுள்ளது. 


அத்துடன் கதிர்காம பாத யாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரி நாதர், யோகர் சுவாமி, சித்தானைக்குட்டி வரையிலான எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் நடைபவனி சென்ற பாதையாகவும் இந்த காட்டுப் பாதை காணப்படுவதாக 'ஷேத்திராடனம்' எனும் நூலில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு