சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 80 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. உலக அளவில் 3200க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டனில் 10 பேரும், லாஸ் ஏஞ்சல்சில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் அமெரிக்காவில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் தீவிரமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள், அந்தந்த நாடுகளிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் இந்த வைரசுக்கு ஒரு நபர் பலியானதையடுத்து, அங்கு மருத்துவ அவசர நிலையை கவர்னர் பிரகடனம் செய்துள்ளார். வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 8.3 பில்லியன் டாலர் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான தீர்மானம் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
0 Comments
No Comments Here ..