இழந்த வைப்பு பணத்தை மீண்டும் செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி ஈ.டி.ஐ வைப்பாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எல்,டீ.பீ.தெஹிதெனிய மற்றும் எஸ். துறைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, மத்திய வங்கியின் நிதியல்லா நிறுவன பிரிவினால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு ஈ.டீ.ஐ நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, ஈ.டீ.ஐ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில், இத்தினங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்கள் வௌியாகியவண்ணம் உள்ளதால் குறித்த விடங்களை மறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் சட்டமா அதிபர் ஊடாக இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
ஈ.டி.ஐ நிறுவனத்தினுள் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் பல வருடங்கள் மௌனமாக இருந்த மத்திய வங்கியின் அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை இடைநிறுத்த வைப்பாளர்கள் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணையத்திற்குச் சென்று காண்பிக்க சட்டமா அதிபர் ஊடாக இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த கோரிக்கையை தான் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் குற்றம் சுமத்தினார்.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் விடுக்கவில்லை.
பின்னர் குறித்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 Comments
No Comments Here ..