அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் அரசியல் , பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு ஆகிய மூன்று முக்கிய காரணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவற்றுக்கு முரணான வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தில் காணப்படுகின்ற 25 உறுப்புரைகள் அதாவது சட்ட மூலத்தில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே குறித்த 25 உறுப்புரைகளில் 16 உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும், எஞ்சிய 9 உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல, சர்வசன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் சட்டமூலமொன்றில் 25 உறுப்புரைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் , அவற்றில் 9 உறுப்புரைகள் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முதன்முறையாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கூட இந்தளவிற்கு சிக்கல் காணப்படவில்லை.
0 Comments
No Comments Here ..