கொழும்பில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்தார். அவர், "தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் தலைமைப் பதவிக்கு எதிராகக்கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போலிக்கருத்துகள் பரப்பப்படுவதாகவும், பிள்ளையான் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததாகக் கூறப்படும் கதைகளும் அதன் மற்றுமொரு அங்கம் எனவும் அவர் தெரிவித்தார். "தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது" என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், அமைச்சர் சந்திரசேகர், தமிழரசுக் கட்சியையும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும் கடுமையாகச் சாடினார். "இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது" என்று குற்றம் சாட்டினார். சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம் கோர்த்து இருந்த நபர் என்றும், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குக் காரணமாக இருந்தவர்களுடன் யாழ்ப்பாணத்தில் இவர்கள் ஒன்று சேரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். "சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று எச்சரித்தார்.
இலஞ்சம், ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும், அதனால்தான் களவாணிகள் கூட்டு சேர்ந்து குட்டிச் சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுவதாகவும், ஆனால் அந்த எதிர்பார்ப்பிலும் மண்கவ்வியுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார். இறுதியாக, "சஜித்தின் தலைமைத்துவம் வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..