மன்னாரில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்த சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு மற்றக் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஒரு கோட்பாடாகத் தங்கள் கட்சிக்கு மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றார்.
இந்தக் கோட்பாட்டை ஏற்கெனவே பல கட்சிகள் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். எந்தக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ, அந்தக் கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கில் 35 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளன என்றும், எனவே அங்கு தாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் ஆணை வழங்கியிருப்பதால், எந்தக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ, அந்தக் கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments
No Comments Here ..