ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிப்பது தொடர்பான முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்த நிலையில், ஜனாதிபதி நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பல காணிகள் குறித்து விரிவான கோரிக்கைகளை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளனர். இது அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இராணுவம் மறுப்பு தெரிவித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனை பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்திலுள்ள வர்த்தக சந்தை, மற்றும் குருக்கள் மடம் பகுதியிலுள்ள பாடசாலைகள் இன்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றோடு வாகரை பிரதேசத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு மற்றும் பயன்படுத்தப்படும் பகுதி குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்றும் பல விடயங்களை சுட்டியாட்டியதோடு.
இந்தக் காணிகள் தொடர்பான விடயங்களை விரிவாக ஆராய ஒரு விசேட குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரினார்.
அதனை தொடர்ந்து, கூட்டத்தின் தலைவர், அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளி உருவாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..