வாஹல்கட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தனது 70 வயது காதலியிடமிருந்து 1.60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற 30 வயது காதலனையும், இத்திருட்டுக்கு உதவிய அவரது 24 வயது நண்பரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 30 வயது நபர் வாஹல்கட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட 70 வயது பெண், தனது கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்து வருகிறார். தற்போது இவர் வென்னப்புவ பகுதியில் ஒரு வயோதிபரை பராமரித்து வருகிறார்.
கலேவெல பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டொன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த போது, அந்தப் பெண்ணின் தொலைபேசிக்கு வந்த மிஸ்டு கால் மூலம், கொள்ளையடித்த காதலன் அறிமுகமாகியுள்ளார். இருவரும் பலமுறை சந்தித்துப் பழகியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, வாஹல்கட குளகாகரைக்கு அந்தப் பெண் சென்றபோது, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளையை தடுக்க முற்பட்ட போது ஏற்பட்ட கைக்கலப்பில், பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாஹல்கட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.ஏ. சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..