2ஜி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில் என்ன என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி ஆ.ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2ஜி வழக்கின் தீர்ப்பில் நான் குற்றவாளி இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிகையில் உள்ள எந்த குற்றத்தையும் சிபிஐ நிரூபிக்கவில்லை. இந்த வழக்கில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். எது உண்மை, எது பொய் என ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க தயார் என்று கூறியுள்ளார். பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை வாசித்துக் காண்பித்தார்.
அதாவது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து, அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இத்தகைய சுயநலம் கொண்டவர்களின் நடத்தை அரசியல் சட்டத்தின் மீது அவர்கள் எடுத்து கொண்ட உறுதிமொழியை மீறுவதாகும். இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அரசியலமைப்பு சட்டத்தின் புனிதத் தன்மையை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது.
இப்படிப்பட்டவர்களின் செய்கை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் எண்ணத்தையும் வாழ்வையும் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற நீதி, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை என அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறப்படும் உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான தன்மை கொண்டது மட்டுமல்ல.
நமது மக்களாட்சி தத்துவத்திற்கு அடித்தளமாக உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை ஆகும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட வரிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பொருந்துமா? அப்படியெனில் யாருக்கு சரியாக பொருந்துகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
இதெல்லாம் இல்லை என்று கூற முடியுமா? ஜெயலலிதா இறந்துவிட்டதால் வழக்கு முடிந்துவிட்டது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முதல்வர் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..