வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளானது இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தின் அதிவேக பயணமும், சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
பேருந்து விபத்தினால் காணாமல் போனவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில், பேரூந்து ஆற்றில் விழுந்த இடத்தில் நீர்மூழ்கிக் குழுவினர் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து நேற்று இரவு கிரேன் உதவியுடன் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு தெரிவித்தார்.
விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், விபத்தில் உயரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..