18,May 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை?

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றைக் அனுப்பி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.

1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை.

ஆனால் 2012ல் ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.

2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயல்முறை தடையின்றி நடந்தது.

எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து நீக்கி VFS GLOBAL என்ற தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.

மேலும், 2012 முதல் 2024 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.

எனினும், அந்த கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் சிறுவர்களுக்கும் 100.5 டொலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், சுற்றுலாப் பயணி ஒருவர் ஒன்லைனில் விசா வசதியைப் பெறும்போது, ​​அது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குத் அறியவந்தாலும் On Arrival முறை மூலம் வரும் சுற்றுலாப் பயணிக்கு வழங்கப்படும் விசா வசதி முதலாவது சந்தர்ப்பத்திலேயே திணைக்களத்திற்கு தெரியவராமை ஆகும்.

இந்நிலைமை 1949 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO என்ற பயண முகவர்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு