இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வசதியுடைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விளையாட்டுத்திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன், யுனிசெவ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திலுள்ள, பல்லேகணுகல கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி நிகழ்வொன்றை சச்சின் டெண்டுல்கர் நடத்தினார்.
பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் சச்சின் டெண்டுல்கர் வழங்கி வைத்தார்.
யுனிசெவ்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2013 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 50 வயதான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என இரசிகர்களால் கொண்டாடப்படுவர். துடுப்பாட்டத்தில் ஏராளமான உலக சாதனைகளைப் படைத்தவர்.
அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் உட்பட 15921 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 463 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 49 சதங்கள் உட்பட 18426 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..