யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கும்பல் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தேவாலயத்திற்கு அருகில், NPP தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மது விருந்தில் ஈடுபட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தக் கும்பல் மதுபோதையில் தேவாலயத்திற்குச் சென்றவர்களுடன் முரண்பட்டு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர், தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் NPP தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..