கடந்த ஓகஸ்ட் 22 ஆம் தேதி சீனாவின் கிழக்குப் பிராந்தியமான ஜெஜ்யாங் மாகாணத்தில் ஒரு காதல் ஜோடி டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது காதலர் தனது காதலிக்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துள்ளார். 10 நிமிடங்கள் வரை மிக அழுத்தமாக காதலிக்கு அவர் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது அவரது காதுக்குள் ஒரு விநோதமான வலி ஏற்பட்டுள்ளது. வலியை பொறுத்துக் கொள்ள முடியாததால் உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரது காதை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபரின் செவிப்பறை சேதமடைந்திருப்பதை கண்டறிந்தனர். இந்த பாதிப்பு சீராகி காது முழுமையாக கேட்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் முத்தம் கொடுத்தால் செவிப்பறை கிழியுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தன்னை மறந்து மிக அழுத்தமாக நீண்ட நேரம் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்கும் போது, இருவரின் மூச்சுக் காற்றும் சுவாசத்தில் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த அழுத்தம் நம் செவிப்பறைக்குள் சென்று அங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் முத்தத்தால் செவிப்பறை கிழியும் சம்பவம் புதிதல்ல என்றும் சீனாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு இது போன்ற சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு சீனப்பகுதியான குவாங்டோங் மாகாணத்தில் ஜூஹாய் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது காதலனுக்கு முத்தம் கொடுத்ததால் காதில் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண்ணின் இடது காது கேட்கும் திறனையே இழந்ததாக கூறப்படுகிறது.
அழுத்தமாக முத்தம் கொடுத்தால் செவிப்பறை கிழியும் என்று வெளியான செய்தி தான் தற்போது சீனாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
0 Comments
No Comments Here ..