நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில், சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகள், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேவேளை, பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..