தென் கொரியாவில் E-8 விசா வகை பருவகால வேலைவாய்ப்புகளுக்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், தென் கொரியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்பட்டு, இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் தென் கொரியாவில் உள்ள நான்கு மாகாணங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை ஜூலை 10ஆம் தேதிக்குள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாத இறுதிக்குள் E-8 விசா பிரிவின் கீழ் முதல் குழுவை தென் கொரியாவிற்கு அனுப்ப இலங்கை திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முழுவதும் இலங்கை அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். தனியார் துறையினர் இதில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த வேலைவாய்ப்புகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தென் கொரியாவில் பருவகால வேலைகளுக்காக ஆண்டுக்கு முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அனுப்ப இலங்கை இலக்கு வைத்துள்ளது.













0 Comments
No Comments Here ..