ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு, ஆளுநரிடம் அளித்த பரிந்துரைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி 7 பேரில் ஒருவரான நளினி தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும், அதில் மாநில அரசோ, நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல்18 ம் தேதி பதில் அளிக்கப்பட்டுவிட்டுதாகவும், அதில், 7 பேரையும் விடுவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். எனவே, 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழக அரசு, ஆளுநருக்கு அளித்துள்ள பரிந்துரைக்கு எவ்வித மதிப்பும் கிடையது என்றும் அவர் தெரிவித்தார்.
நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் வாதத்தைப் பார்க்கும் போது, மாநில அரசை மத்திய அரசுதான் நடத்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
0 Comments
No Comments Here ..