சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.
இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் கடந்த வாரம் ரஷியா- சிரியா படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 34 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு துருக்கி நடத்திய பதிலடி தாக்குதலில் 50-க்கும் அதிகமான சிரியா ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் சிரியாவின் ஆதரவு நாடான ரஷியாவுக்கும்-துருக்கிக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இட்லிப் மாகாணத்தின் ஜிஸ்ர்-அல்-ஷோகர் பகுதியில் இன்று சிரியா அரசுப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த துருக்கியின் எப்-16 ரக போர் விமானம் சிரியா அரசுப்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில் சிரியா போர் விமானம் வானிலேயே தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கி படைகள் ஏற்கனவே இரண்டு சிரியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தால் துருக்கி-சிரியா இடையேயான போர்ப் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..