கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், இரசிகர்கள் இல்லாமல் டென்னிஸ் போட்டிகளை நடத்துவதை விட அவற்றை இரத்து செய்து விடுவது நல்லது என செக் குடியரசின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான பெட்ரா கிவிடோவா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் பெரும்பாலும் சில நாடுகளில் குறைந்துள்ளதால், தடைப்பட்ட டென்னிஸ் தொடர்களை நடத்துவதற்கு பிரான்ஸ், ஸ்பெயின், செக் குடியரசு போன்ற நாடுகள் முன்வந்துள்ளன.
எனினும், சிறிது காலத்துக்கு இரசிகர்கள் இன்றி பூட்டிய அரங்குக்குள் போட்டியை நடத்துவதற்கு டென்னிஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதனிடையே செக் குடியரசில் உள்நாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹார்டுகோர்ட் டிரா’ டென்னிஸ் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரா கிவிடோவா கூறுகையில்,
“எனக்கு இன்னும் வயது உள்ளது. ஓரிரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். ஆனால், சூழ்நிலை இப்படியே தொடர்ந்தால் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவதை தவிர்த்துவிடுவேன்.
வீரர்களான எங்களுக்கு இரசிகர்கள்தான் இன்ஜின்கள். அவர்கள் தருகின்ற உற்சாகமும், ஆரவார வரவேற்பும் தான் எங்களை விளையாட வைக்கிறது. அந்த இரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எனக்கு அழகாகத் தெரியவில்லை.
அப்படி விளையாடும் போட்டிகளை கிராண்ட்ஸ்லாம் என்றும் சொல்ல முடியாது. இரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விட அவற்றை இரத்து செய்து விடுவது நல்லது” என கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..