இராணுவ பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் கடந்த நாட்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை விட இந்த அச்சம் மக்களை துன்புறுத்துகிறது. ஆனால் கொரோனா வைரஸை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இதனை பொறுத்துக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் ஆளுநருக்கு பதிலாக இராணுவ பின்னணியுடைய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதனை ஏற்க முடியாது.
இந்த அரசு தமிழ் மக்களை ஒரு அச்ச சூழலுக்குள் வைத்திருக்கவே நினைக்கிறது.
அப்படியான எண்ணத்தை உடனடியாக மாற்ற வேண்டும். தமிழ் சிவில் அதிகாரிகளையே வடக்கு மாகாண ஆளுநராக அரசு நியமிக்க வேண்டும்.
தமிழர்களை பழிவாங்கும் பேரினவாத சிந்தனையிலிருந்து அரசு விடுபட வேண்டும்.
அல்லது இந்த அரசின் அராஜகத் தன்மைகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..