05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராணுவ செயற்பாடுகள், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் காணப்படும் இராணுவ ஆதிக்கம் மற்றும் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவற்றை கூறினார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது.

எனினும் நாடு இராணுவ மயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டே வருகின்றது. ஓய்வுபெற்ற தகுதியான அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது.

இராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின் சேவையை பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார்.

மாறாக இந்த நாட்டை இராணுவ மயமாக்க வேண்டும் என்ற தேவையொன்று இல்லை. இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஜனாதிபதியும் இராணுவத்தை ஆட்சிக்கு கொண்டுவர நினைக்கவும் மாட்டார்.

மேலும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. இருக்கும் முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர இருக்கின்ற முகாம்களை அகற்ற எமக்கு எந்த நோக்கமும் இல்லை. வடக்கில் முகாம்களில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என்பதற்காக மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்ற அர்த்தமில்லை. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்.

காணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம். அதேபோல் யுத்தத்தில் எமக்கு எதிராக போராடியவர்கள் கொல்லப்பட்டனர், ஏனையோர் சரணடைந்தனர்

சரணடைந்த நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும். யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை நாம் ஒப்படைத்துள்ளோம். செஞ்சிலுவை சங்கம் ஊடாக அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.




புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு