ஓய்வில்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட காவல்துறையின் ஒரு நாள் சம்பளத்தை அவர்களுக்கே திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில், “கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கும் மேலான தொகையை, தானாக முன்வந்து முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடுத்த முடிவின் அடிப்படையில், அரசுக்கு தமிழக டி.ஜி.பி. கடிதம் எழுதியிருந்தார். அதில், கொரொனா தடுப்புப் பணியில் ஓய்வில்லாமலும், அர்ப்பணிப்போடும் காவல்துறை பணியாற்றி வருவதால், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புத் தொகையை திருப்பித் தரவேண்டும்’ என்று கோரியிருந்தார்.
அதன்படி, காவல்துறை மொத்தமாக அளித்திருந்த தொகையான ரூ.8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து திருப்பி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை, சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
0 Comments
No Comments Here ..