இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் தரம் 06க்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முதல் முறையாக இணையத்தள தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்றது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன் தலைமையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக சித்தியடைந்த மாணவர்களுக்கு புதிய பாடசாலை அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பாடசாலைகளின் பெயர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் குறிப்பிடப்பட்ட ஏனைய தகவல்கள் உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்புக்கு அமைவாக உள்வாங்கும் பணி பாடசாலை அதிபர்களினால் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (10) தொடக்கம் டிசம்பர் 24 ஆம் திகதி வரை தமிழ், சிங்கள மொழி மூலம் இத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்பு அதிபர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபிடெல் நிறுவனத்தின் அனுசரணையில் ரூபா 7.5 மில்லியன் செலவில் இவ்வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதற்கு 1952 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம் மாவட்ட வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்று சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளில் தரம் 06 இல் இருந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வெற்றிகரமாக இவ்வாண்டு நடைபெற்ற இப்பரீட்சைக்கு 326,264 மாணவர்கள் தோற்றியதோடு, 47,193 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்று, புதிய பாடசாலை அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
0 Comments
No Comments Here ..