28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

பிரித்தானியாவில் புதிதாக தோன்றிய புதிய வைரஸினால் விமானப்போக்குவரத்து எல்லைகளை மூடின பல நாடுகள்


பிரித்தானியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றையடுத்து பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி விமான போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளன.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்று உலக நாடுகளை மீண்டும் குழப்பத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. பல ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள் இங்கிலாந்துடனான எல்லைகளை மூடியதுடன், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளன.

துருக்கி, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஒஸ்திரியா, பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் கனடா உட்பட சுமார் 20 நாடுகள் இங்கிலாந்திலிருந்து அனைத்து விமானங்களையும் தடை செய்துள்ளன, மேலும் பல நாடுகளும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா

ஏற்கனவே நாட்டில் உள்ள வெளிநாட்டு விமானங்கள் வெளியேறலாம் என்றாலும் சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு சர்வதேச வர்த்தக விமானங்களை நிறுத்தியதாக என்று உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தனது நிலம் மற்றும் கடல் எல்லைகளை மூடியமை குறிப்பிடத்தக்கது.

புதிய வைரஸ் பரவாத நாடுகளில் இருந்து பொருட்களை நகர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் பொருந்தாது என்று அரச செய்தி நிறுவனமான SPA வெளியிட்ட அமைச்சக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்

அண்டை நாடான குவைத் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்தி அதன் நிலம் மற்றும் கடல் எல்லைகளை உள்ளூர் நேரப்படி நேற்று திங்கள் இரவு 11 மணி முதல் ஜனவரி 1 வரை மூடும் என்று அரசு தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், சரக்கு நடவடிக்கைகள் தொடரும்.

ஓமான்

செவ்வாய்க்கிழமை தொடங்கி ஓமான் தனது நிலம், காற்று மற்றும் கடல் எல்லைகளை ஒரு வாரத்திற்கு மூடும் என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த முடிவு செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

இஸ்ரேல்

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் இராஜதந்திரிகள் போன்ற சிறப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அல்லது டென்மார்க்கிலிருந்து வருபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஹொட்டல்களில் தனிமைப்பட வேண்டும். ஏனைய நாடுகளில் இருந்து வருபவர்கள் தமது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

உள்ளூர் நேரம் புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல், இஸ்ரேலிற்கு வரும் அனைத்து பயணிகளும் ஹோட்டல்களில் 10-14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். புதிய விதிமுறைகள் ஆரம்பத்தில் 10 நாட்களுக்கு பொருந்தும். நீட்டிப்பு சாத்தியம்.

ஸ்பெயின்

ஸ்பெயினின் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தவிர இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.

மொராக்கோ

கொரோனா அபாயத்தையடுத்து இரவு நேர ஊரடங்கை மொராக்கோ அறிவித்துள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும். நாளை புதன் கிழமை நடைமுறைக்கு வருகிறது. மூன்று வாரங்கள் நடைமுறையிலிருக்கும்.

கடைகள், மோல்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும்.





பிரித்தானியாவில் புதிதாக தோன்றிய புதிய வைரஸினால் விமானப்போக்குவரத்து எல்லைகளை மூடின பல நாடுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு