29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியில் நடமாடாமலிருக்க இராணுவம், காவல்துறையினர் கண்காணிக்க ஏற்பாடு

யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் காவல்துறை உதவியுடன் கட்டுப்படுத்துவதாக இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பிரதிநிதி மற்றும் பிரதேச செயலர்கள், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டார்கள்.

குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,

தற்போதைய நிலைமையில் எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் அத்தோடு சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5000 பேரை தாண்டியுள்ளது. அத்தோடு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக உடுவில், தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய், கோப்பாய், பிரதேச செயலர் பிரிவுகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அத்தோடு நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் தொற்றுக் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது.

நேற்றைய நிலவரத்தின் படி 2275 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

406 குடும்பங்கள் உடுவில்பிரதேசத்திலும், 350 குடும்பங்கள் தெல்லிப்பளையில், 260 குடும்பங்கள் கோப்பாயிலும், 163 குடும்பங்கள் சங்கானையில் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் அந்தந்த பிரதேச செயலர் பிரிவில் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றன. அரச சுற்று நிருபத்தின் அடிப்படையில் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது.

எப்படியாயினும் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதாக தெரிவிக்கப் படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் கவனம் எடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதாவது யாழ்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் கட்டுப்பாட்டை மீறி வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவல்துறையை மீறி அவர்கள் வெளியில் நடமாடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் எதிர்வரும் நாட்களில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே இன்றைய கூட்டம் அமைந்துள்ளது.

அதாவது எதிர்காலத்தில் தனிமை படுத்த பட்டவர்கள் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாகவே இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இன்று வரை தொற்று இனங் காணப்படவில்லை. அதைத் தவிர ஏனைய அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிலும் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்தப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வெளியில் நடமாடதவாறு கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு நமது மாவட்டத்தை பாதுகாக்க முடியும் என்றார்.

குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

டிசம்பர் மாதம் வரைக்கும் யாழ்மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனினும் மருதனார்மட தொற்றாளர் இனங்காணப்பட்ட பின்னர் நிலைமை சற்று வேகமாக அதிகரித்து செல்கின்றது. நேற்றுவரை 106 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு 102 பேர் இந்த மருதனாமடம் கொத்தணியோடு சம்பந்தப்பட்டு தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் ஒன்பது பேர் தொற்டுக்குள்ளாகியிருந்தார்கள். எழு மாற்றாக சில பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதில் ஒரு கட்டமாகத்தான் முச்சக்கரவண்டி சாரதிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர்களில் ஒருவருக்கு தொற்று காணப்பட்டது.

அதன் பின்னர் குறித்த சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் சந்தைதையுடன் தொடர்புபட்ட பொதுமக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

அதில் ஒரு விடயம் என்னவென்றால் குறித்த சந்தைக்கு விஜயம் மேற்கொண்டு வியாபார பொருட்கள் வாங்க வந்த ஒருவரின் குடும்பத்தார் அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு தற்போது ஏனைய சந்தைகளிலும் குறித்த தொற்று பரவாமல் இருப்பதற்காக அனைத்து சந்தைகளையும் மூடி வைத்தி ருக்கின்றோம். ஏனைய சந்தைகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் சங்கானை சந்தைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அனைத்து சந்தைகளையும் தற்காலிகமாக மூடி வைத்து இருக்கின்றோம். அத்தோடு சந்தை வியாபாரிகள் மட்டுமல்லாது சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்களுக்கு தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

குறித்த சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னர் ஒரு நபர் எமது சுகாதார பிரிவு அறிவித்திருந்தார். நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த சந்தைக்கு சென்றதாக. அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தோற்று உறுதியாக இருந்தது. மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளோருக்கு முதலாவது பிசிஆர் பரிசோதனையில் சில வேளைகளில் தொற்று இல்லை என காண்பிக்கும். அது சில வேளைகளில் இரண்டாவது பரிசோதனையின்போது தோற்று உள்ளதாக காண்பிக்கும். எனவே இரண்டாவது பரிசோதனை முடிவுகளின்படியே அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சுகாதாரப் பிரிவினர் மிகவும் இறுக்கமாக இந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம். உதாரணமாக கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒரு மதகுருவினால் இங்கு தொற்று ஏற்பட்டது.

எனினும் அந்த நேரத்தில் கூட நாங்கள் குறித்த பாதிரியாரின் ஆராதனையில் பங்கு பற்றி அனைவரையும் தனிமைப்படுத்தியதன் காரணமாக அந்த தொற்று ஏனையோருக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

எனவே தற்போதும் நாங்கள் அந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றோம். அதாவது தொற்றுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதாகும்.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தனிமைப்படுத்தல் வெகுவிரைவில் நிறைவு செய்யப்பட உள்ளது. எனினும் வருகின்ற திங்கட்கிழமை அளவில் நாங்கள் அவர்களுடைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களை சிலவேளைகளில் விடுவிக்க முடியும். எனவே எதிர்வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு ள்ளோரை மிகவும் அவதானமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் பொலீசாரின் உதவியை சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாங்கள் கோரி யுள்ளோம். ஏனெனில் தற்போது ஒரு கேள்வி உள்ளது ஒரு பிரதேசத்தின் ஏன் முடக்காது வைத்திருக்கிறீர்கள் என.

குறிப்பாக நாங்கள் ஒரு பிரதேசத்தினை முடக்கினால் அந்த பிரதேசத்தில் உள்நுழையும் பகுதிகளில் மாத்திரம் வீதித் தடைகளை போடுவோம். ஆனால் உள்ளே உள்ளவர்கள் அனைவருடனும் பழகுவார்கள். தமது அன்றாட செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஏற்படும் போது அங்கே உள்ள அனைவருக்கும் தொற்று பரவக் கூடிய சாத்தியக்கூறு காணப்படும். இதன் காரணமாகத்தான் முடக்கல் நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

இதற்கு தனிமைப்படுத்தலே சரியான வழியாகும். எனினும் தனிமைப்படுத்தி உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது என்றார்.





யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியில் நடமாடாமலிருக்க இராணுவம், காவல்துறையினர் கண்காணிக்க ஏற்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு