சில்க் ஸ்மிதாவின் மறைவுக்கு பிறகு அவர் இடத்தை பிடிக்க நடந்த போட்டியில் தமிழ்நாட்டில் அனுராதாவும், மலையாளத்தில் ஷகிலாவும் முன்னணியில் இருந்தனர். இதில் ஷகிலா நடித்த அந்தக்கால 18+ படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. அதே படங்கள் தமிழ்நாட்டில் காலைக் காட்சிகளாக வசூலை குவித்தன. ஷகிலாவின் படங்களால் கலாசாரம் சீரழிகிறது என்று மலையாள சினிமா உலகம் ஷகிலா படங்களுக்கு தடைவிதிக்க, ஏறிய வேகத்தில் இறங்கினார் ஷகிலா. இந்த சம்பவங்களை மையமாக வைத்து அவர் படங்கள் தடைசெய்யப்பட்டதற்கு அங்குள்ள முன்னணி ஹீரோதான் காரணம் என்றும், அவர்தான் ஷகிலாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கெடுத்தார் என்றும் இந்தப் படத்தில் சொல்கிறார்கள்.ஷகிலா நடித்த படங்களில் அவர் முகம்தான் நடித்தது, உடல் இன்னொரு பெண்ணுடையது என்றும், குடும்பத்தை காப்பாற்றவே அவர் அப்படிப்பட்ட நடிகையாக மாறினார் என்றும் புதிது புதிதாக கற்பனை சேர்த்து ஷகிலாவின் பயோபிக் என்று மீண்டும் ஒரு ஷகிலா படத்தை தந்திருக்கிறார் இந்திரஜித் லங்கேஷ். மலையாள சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் ஒரு முன்னணி நடிகரை களங்கப்படுத்தி இருப்பதும், சில்க் ஸ்மிதா பற்றிய மோசமான சித்தரிப்பும் பிழைகளாக நிற்கின்றன. ஷகிலாவாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவுக்கு நடிப்பை விட கவர்ச்சிதான் அதிகமாக வருகிறது.
அழுகிற காட்சியில் கூட கண்ணீரில் கரைகிற அளவிற்கு மேக்அப்புடன் நடித்திருக்கிறார். அந்த மலையாள முன்னணி நடிகரை நினைவுபடுத்தும் விதமாக அவரது மேனரிசம், வசன உச்சரிப்பு என அசத்துகிறார் பங்கஜ் திரிபாதி. ஷகிலாவின் தயாரிப்பாளர் ராஜன் பிள்ளையாக நடித்திருக்கும் விவேக் மதன் நடிப்பு தவிர மற்றவர்களின் நடிப்பு குறிப்பிடும்படி இல்லை. ஷகிலாவின் பள்ளி ஆரம்ப வாழ்க்கை அழகும், அழுகையும் நிறைந்தது. அவரது சிறுவயது வாழ்க்கை சம்பவங்கள் நிறைவாக இருக்கிறது. ஆனால், ஷகிலாவின் பயோபிக்கை சொல்ல வந்தவர்கள், பின்பகுதியில் எங்கெங்கோ சென்று கடைசியாக ஷகிலா நல்லவர்தான் அவர் படத்தை எடுத்த ஆண்கள், அதை பார்த்த ஆண்கள் அனைவரும்தான் குற்றவாளிகள் என்று முடிக்கிறார்கள். சந்தோஷ் ராயின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன.
0 Comments
No Comments Here ..