07,May 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கவிருக்கும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில், அவசரகால அனுமதியின் அடிப்படையில் செலுத்தப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேலுள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியின் போது, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு நடத்தப்படவில்லை என்பதால், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் உறுதி செய்யப்படாதவர்களும், பாலுட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை, இரண்டு விதமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டியிருப்பின், ஒரு தடுப்பூசிக்கும், அடுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் 14 நாள்கள் இடைவெளி நிச்சயம் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

கோவிஷீல்டு மருந்து செலுத்திக் கொள்பவர்களுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் சிலருக்கு அரிப்பு, வலி ஏற்படலாம் என்றும், சிலருக்கு தலைவலி, மயக்கம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, கோவாக்சின் மருந்து செலுத்திய இடத்தில் வலியும், செலுத்திக் கொண்டவர்களுக்கு தலைவலி, மயக்கம், காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, வாந்தி, அதிகமான வியர்வை, உடல் குளிர்தல், இருமல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம் போன்றவையும் ஏற்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகள் எழுந்தால், பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு