18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு தொற்று! வடக்கில் எகிறும் கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கின் கொரோனா நிலவரம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 366 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.

நெல்லியடி பொதுச் சந்தையில் இன்று வியாபாரிகளிடம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் குறித்த நபருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 9 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 5 பேர் மிருசுவிலில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மன்னார் நானாட்டானில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் ஜா- எலவுக்கு சென்று திரும்பிய நிலையில், அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் அச்சுவேலிச் சந்தையில் கடந்த வாரம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.




யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு தொற்று! வடக்கில் எகிறும் கொரோனா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு