எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன்.
முதல்- அமைச்சர் முக ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவது குறித்து டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் அவர் பேசி இருப்பதாவது:-
அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது.
முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகிய நான்கின் காரணமாகவும் தான் இந்த அளவுக்கு நாம் வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைய தகவல்களின் அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும் ஏராளமாக உள்ளன.
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன்!
நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது.
இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால் இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.
இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால், ஏன் என்ற காரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான்.
முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, அவசியமான பொருள்களைக் கூட வாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோல் மாநிலத்தில் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது ஆகிய மூன்று காரணங்களால் தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். இந்த தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான். அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை.
பள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத் தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும். அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது.
முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாகவேண்டும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..