16,Apr 2024 (Tue)
  
CH
WORLDNEWS

உக்ரைன் மீது குண்டு வீச்சு தாக்குதல் - தொடங்குகிறதா 3-ம் உலகப்போர்?

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.


ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்தன.


இதனால், ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.


அதன் பின்னர், பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம் திரும்புகின்றன என்றும் ரஷியா அறிவித்தது.


ஆனால், உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக ரஷியா கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து எல்லைகள் ரஷிய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த படைகள் இன்னும் ஓரிரு நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில், உக்ரைன் மீது இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. டான்பஸ் உக்ரைனின் எல்லையோர மாகாணமாகும். இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.


டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது. அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷியாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? அல்லது உண்மையிலேயே ரஷியா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? என பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.


உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.   





உக்ரைன் மீது குண்டு வீச்சு தாக்குதல் - தொடங்குகிறதா 3-ம் உலகப்போர்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு