மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் இன்றைய தினம் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த சிந்துஜா மற்றும் வேணுஜா ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று திரட்டியமை மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பேரில் ஒன்று கூடிய பொதுமக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது வீதிகளை மறித்தும், டயர்களை கொளுத்தியும் மக்கள் தங்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர் மீதும் வைத்தியசாலை மீதும் சிலர் கல்வீச்சு தாக்குதலை நடத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், பல மாதங்கள் கழித்து மன்னார் காவல்துறையினர் இன்றைய தினம் குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..