இலண்டனுக்குச் செல்லும் விமானத்தை 10 நிமிடங்கள் தவறவிட்ட பெண் ஒருவர், ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் இலண்டன் புறப்பட வேண்டியவர் பூமி சவுகான். ஆனால் அவர் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விமானத்தைத் தவறவிட்டார்.
பேரிழப்பு பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் முற்றிலும் வெறுமையாக உள்ளது என்று அவர் கண்கலங்கியுள்ளார்.
விமானத்தைத் தவறவிட்டதால், மதியம் 1.30 மணியளவில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக சவுகான் தெரிவித்துள்ளார்.
இலண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சவுகான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக இலண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்தார். 2 வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்த அவர், தனது கணவருடன் இலண்டனில் வசிக்கிறார்.
வெறும் பத்து நிமிடங்களால்தான் என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (12) பிற்பகல் நடந்த இந்த விபத்து போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் விமானம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். 12 வருடங்கள் பழமையான இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்தது.
ஆனால் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அது வேகமாகக் கீழிறங்கி, ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதிய பிறகு ஒரு பெரிய தீப்பந்தமாக வெடித்தது.
மேலும், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு 625 அடி உயரத்தை எட்டியிருந்தது. பிரித்தானியா, இந்தியா, கனடா மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் உட்பட 242 பயணிகளுடன் புறப்பட்டு விபத்துக்குள்ளான AI-171 என்ற விமானத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..