யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் குறித்த பிளாஸ்டிக் துகள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் இவற்றை எடுத்துச்செல்வதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் வந்த வழி, அவற்றின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றின் அவசியத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments
No Comments Here ..