ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு, 20 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இருவர் நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி, படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவைச் சேர்ந்த ஒருவர் நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பணியகத்திடம் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரப்பட்டதாகவும், 20 இலட்சம் ரூபா செலுத்தப்பட்ட நிலையில், மீதித் தொகையை செலுத்தாவிட்டால் குழந்தையைக் கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (ஜூன் 17) சீதுவ பொலிஸ் பிரிவின் தம்பத்துரை பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும், மெட்டியகனே மற்றும் கொட்டுகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இந்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றும், முறைப்பாட்டாளரை அச்சுறுத்த மட்டுமே அவர்களது பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மை துப்பாக்கி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கப்பமாகப் பெற்ற பணத்தில் வாங்கப்பட்ட புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்கத் தொலைபேசிகள், சிம் கார்டுகள், பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..