இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி. பரஞ்சோதி, தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று (ஜூலை 1) கட்சிப் பொதுச் செயலாளருக்கு எழுத்துபூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார்.
பரஞ்சோதி தனது கடிதத்தில், தான் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்டத் தலைமை கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற்பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை கட்சிக்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்," என அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவராகச் செயல்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதனும் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாகப் பொதுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்து இ. சாள்ஸ் நிர்மலநாதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் மாவட்டக் கிளை தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடுத்தடுத்த பதவி விலகல்கள் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்கட்சிப் பூசலையும், தலைமை மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றன.
0 Comments
No Comments Here ..