வவுனியா, சமயபுரம் பகுதியில் நேற்று இரவு நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், மனைவியையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய ஒரு குடும்பஸ்தர், பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: சமயபுரத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு வந்த கிருஷ்ணகுமார் (45) என்ற நபர், தனது மனைவி வசந்தி (30) மற்றும் மாமியார் இந்திரா (69) ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், வீட்டிற்கும் தீ வைத்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த வசந்தி மற்றும் இந்திரா ஆகியோர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்செயலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணகுமார், பின்னர் அதே வீட்டின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாகக் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் உள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த கிருஷ்ணகுமாரும், காயமடைந்த வசந்தியும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவியாக சமயபுரத்தில் வசித்து வந்தனர் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..