இந்தோனேசியாவின் பிரபலமான ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 43 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் (National Search and Rescue Agency) தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு மீட்டர்கள் உயரத்துக்கு கடலலைகள் மேலெழும்பக்கூடிய அளவில் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்ட போதிலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினமிரவு (ஜூலை 2) 65 பேருடன் பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த கே.எம்.பி துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல், புறப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது இப்படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான நீரில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக பன்யுவாங்கி பொலிஸ் பிரிவுத் தலைவர் ராம சம்தாமா புத்ரா தெரிவித்தார். மீட்புப் பணியில் இரண்டு இழுவைப் படகுகள், இரண்டு சிறிய அளவிலான கப்பல்கள் உட்பட ஒன்பது படகுகள் நேற்று முன்தினமிரவு முதல் காணாமல் போயுள்ள 43 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..