உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர், ஒரு தொழிலதிபரிடம் இருந்து 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று (ஜூலை 7) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்தது. திணைக்கள அலுவலகத்தில் வைத்து சந்தேகநபர் மதியம் கைது செய்யப்பட்டார்.
தெமட்டகொட, கொலன்னாவை வீதியில் இயங்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த ஆண்டுக்கான வரி விலக்கு அறிக்கையை வழங்குவதற்காக, சந்தேகநபர் ஆரம்பத்தில் 100,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார். பின்னர், இந்தத் தொகை 50,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை 3ஆம் திகதி அவருக்கு 42,000 ரூபாய் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மீதமுள்ள 8,000 ரூபாயைப் பெறச் சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதி ஆணையாளர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.













0 Comments
No Comments Here ..