அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறைகேடான கொள்கலன் விடுவிப்பு விவகாரம்:
"சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட பெரும்பாலான கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டமை பாரதூரமானது என்று நாங்கள் குறிப்பிட்ட விடயத்தையே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது," என்று விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், "பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றிப் பல விடயங்களைக் குறிப்பிட்டு மக்களுக்கு இதனை அறிவுறுத்தியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். பேச்சு சுதந்திரம் திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகின்றது. அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்படுகின்றார்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
முறையற்ற வகையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்ட விடயத்துக்காகத் தாம் கொழும்பு குற்றத் தடுப்புத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு சென்று வாக்குமூலம் அளித்ததாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கை, கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தில் கொள்கலன்கள் விடுவிப்பில் ஏற்பட்ட நெரிசல் இயல்பானதா அல்லது திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டதா என்பதில் சந்தேகம் உண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளதாகவும், இதனையே தாங்களும் முன்னர் குறிப்பிட்டதாகவும் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
"குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும். அரசின் முறைகேடான செயற்பாடுகள் இறுதியில் அரச அதிகாரிகள் மீது சுமத்தப்படுகின்றன. கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்திலும் இதுவே நேர்ந்துள்ளது," என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..