தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 15) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்பட்டது. நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், இதுவரை 65 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு உட்பட அனைத்து எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளில், புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும், வழக்கமான சடலங்கள் தகனம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கு காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, நான்கு முதல் ஐந்து வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு தொடர்பில் ஆழமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அகழ்வுப் பணிகளைக் கண்காணிக்க, சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் அகழ்வுப் பகுதிக்குச் செல்ல மன்று அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ஊடகவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத கட்டுக்கதைகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கண்டெடுக்கப்படும் சான்றாதாரப் பொருட்களைப் புகைப்படம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு, அடுத்தகட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 6ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது. இந்த அகழ்வுப் பணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாகும்.
0 Comments
No Comments Here ..