யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், தனக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, ஒரு சிவில் செயற்பாட்டாளர் நேற்று குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியிருந்தார்.
இந்த நிலையில், எஸ். ஸ்ரீதரனின் ஊடகப் பிரிவு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், "தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வரவேற்பதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று அவர் நம்புவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலையில், தமக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படும் போது அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தயாராக இருக்கிறார்" என்றும் அவரது ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..