செம்மணி மனிதப் புதைகுழியில் மனித எச்சங்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வதன் மூலம் உண்மையை நிலைநாட்ட முடியும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி வலியுறுத்தியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழி முதன்முதலில் தோண்டப்பட்டபோது 15 மனித எலும்புக்கூடுகள் மட்டுமே அடையாளங்காணப்பட்டன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 80 மனித எலும்புக் கூடுகளைக் கடந்துவிட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே செம்மணி புதைகுழி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஓர் இராணுவ அதிகாரி, குறித்த பகுதியில் 600 வரையான சடலங்கள் இருப்பதாக சாட்சியம் வழங்கியுள்ளதையும் சுரேன் குருசுவாமி நினைவுபடுத்தினார். இதன் அடிப்படையில், குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அதனை கண்காணிப்பதற்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
இலங்கை பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் இவ்வளவு பாரிய மனித எச்சங்கள் வெளிவருகின்ற நிலையில், அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் அகழ்வுப் பணிக்கான நிதிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகவே, குறித்த புதைகுழி தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு, சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கும் என சுரேன் குருசுவாமி மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..