09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்!

மாசி மாதத்தில்தான் சகல வரங்களையும் அருளும் மகா சிவராத்திரி, சிவபாலன் முருகனை வழிபட உகந்த மாசிமகம், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத்தரும் மாசி அமாவாசை ஆகிய புண்ணிய தினங்களும் வருகின்றன.

மாதங்களில் மாசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மாசி மாதம் புனித நீராட உகந்த மாதமாகவும் அதே நேரம் சுப நிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில்தான் சகல வரங்களையும் அருளும் மகா சிவராத்திரி, சிவபாலன் முருகனை வழிபட உகந்த மாசிமகம், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத்தரும் மாசி அமாவாசை ஆகிய புண்ணிய தினங்களும் வருகின்றன. இதோ மாசி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்கள் சிலவற்றை தற்போது காணலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்-18-02-2020

அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்த பாரத தேசத்தில் நம் சனாதன தர்மத்தின் சிறப்புகளை உயர்த்திப் பிடிக்கவும் காலத்துக்கேற்ற உயரிய ஆன்மிகநெறியைப் போதிக்கவும் தோன்றியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். பெண்கள் அனைவரும் தேவியின் ஸ்வரூபம் ஆவர். அவர்கள் அனைவரையும் தாயைப்போலக் கருத வேண்டும் என்று உரைத்த பரமஹம்சர் தன் சீடரான விவேகானந்தருக்கு உபதேசம் செய்தபோது,

"உனக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென்றால், தேவியைப் பற்றிக்கொள். ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று காரியங்களைச் சிறப்பாகச் செயல்புரிகின்றாள். ஒவ்வொரு பெண்ணும் அவள் உருவம் கொண்டவள்" என்று வழிநடத்திய அற்புதர். அத்தகைய மகான் பரமஹம்சரின் பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவரையும் அன்னை சாரதா தேவியையும் தியானித்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

விஜயா ஏகாதசி -19-02-2020

மாதம்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் ஏகாதசி திதிகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பெயரும் சிறப்பும் உடையது. விஜயா என்றால் வெற்றி என்று பொருள். இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் கடல் கடந்தும் சென்று வெற்றியை நிலைநாட்டுவர் என்று நம்பிக்கை. ராமபிரானே இந்த விரதத்தை அனுசரித்துக் கடல் கடந்து இலங்கை சென்று வெற்றியும் பெற்று நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இந்த நாளில் 7 தானியங்களை ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி அதில் கலசம் வைத்துப் பெருமாளை ஆவாஹனம் செய்து வழிபட சகல காரியங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷம் -21-02-2020

ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியே பிரதோஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் சிவ வழிபாட்டுக்கும் நந்தி வழிபாட்டுக்கும் உரியது. நந்திதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வரங்கள் கிடைக்கும். சிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்று சொல்லும் வழக்கம் உண்டு. இந்த பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு நம் துயர்கள் தீர்வோம்.

மகாசிவராத்திரி -21-02-2020

மாதம்தோறும் சிவராத்திரி வந்தபோதும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. ஆண்டில் பிற சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த நாளில் வழிபாடு செய்தால் ஆண்டுதோறும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகளையும் கண்டு சிவ வழிபாடு செய்ய சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாசி அமாவாசை-23-02-2020

பொதுவாகவே, அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டுக்கு உரியது. அதுவும் மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, அவிட்ட நட்சத்திர தினத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் செலுத்தி மனதார வழிபட அனைத்து நலன்களும் சூழும் என்பது நம்பிக்கை.

சஷ்டி விரதம்

முருகப் பெருமானை வழிபட உகந்த திதி சஷ்டி. இந்த நாள் முழுவதும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதம் சஷ்டி விரதம். இந்த நாளில் தவறாமல் ஆலயம் சென்று முருக வழிபாடு செய்வது அவசியம்.

ஆமலகி ஏகாதசி

ஆம்லா என்றால் நெல்லிக்கனி என்று பொருள். மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்தவற்றுள் நெல்லிக்கனியும் ஒன்று. இந்த ஏகாதசி தினத்தில் நெல்லி மரத்தடியில் பகவானை வழிபடுவது வழக்கம். இவ்வாறு பெருமாளை வழிபாடு செய்ய, மகாலட்சுமி தேவியின் அருள்கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனி மகாபிரதோஷம்

பிரதோஷ தினங்களில் சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகாபிரதோஷம் என்று போற்றப்படுகிறது. இறைவன் ஆலகால விஷத்தை உண்டு திருநடனம் புரிந்தது சனிப் பிரதோஷ வேளையில்தான். எனவேதான் இதை மகாபிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

மாசி மகம்

மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். அம்பிகை ஒரு சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும் மாசி மகத்தில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.

மாசி பௌர்ணமி / ஹோலிப் பண்டிகை

பொதுவாக பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்கு உரியது. மாசி மாதப் பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் உரியது. அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாதப் பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது. கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.

சங்கடஹர சதுர்த்தி

வாழ்வில் துயர்கள் தீர நமக்கு வாய்த்திருக்கும் திதிகளில் சங்கடஹர சதுர்த்தியும் ஒன்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் சந்திர உதய நேரத்தில் முதலில் விநாயகரை வணங்கி, பின் சந்திர தரிசனம் செய்வதன் மூலம் நம் துயர்கள் நீங்கப்பெறலாம் என்பது ஐதிகம்.





மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு