உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வீதிகளை புனரமைப்பது தொடர்பில் தமது அரசியல் நலனுக்காக சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை கூறிவருவதாக வடமாகாண ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுனர் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த தை மாதம் இருபத்து மூன்றாம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் கௌரவ வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது.
உள்ளூராட்சி மன்றங்களின் கீழே பெரும்பாலான வீதிகள் திருத்தப்படாத நிலை தொடர்பில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் ஆராய்ந்தார் .
அவ்வேளை உள்ளூராட்சி மன்றங்களின் கீழே திருத்தப்படாத வீதிகளை திருத்துவதற்கான நிதியேற்படுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு திட்டவரைபு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை விரைவில் தனக்கு சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்
பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைச்சின் வரவுசெலவு திட்ட முன்வரைப்பிற்கு அனுப்பி வரவுசெலவு திட்டத்தின் மூலமாக நிதி ஏற்படுகளை பெற்றுக்கொள்ளும் விதத்திலே குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்பட்டன.
இந்நிலையில் குறித்த வீதி புனரமைப்பு தொடர்பாக அரசியல் நோக்கத்திற்காக சிலரால் மக்களிடம் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது .
குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் கீழே திருத்தப்படாதிருக்கும் வீதிகளை புனரமைப்பதற்கான நிதியினை தேர்தலுக்கு பின்னரான வரவுசெலவு திட்டத்தின் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் செயலகம் மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கின் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீதி அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி மேற்கொள்வதாக, இல்லாத விடயங்களை குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுவதாக தமிழ்பக்கம் சில நாட்களின் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த விடயத்தில் ஆளுனரும் தற்போது கவனம் செலுத்தியுள்ளார்.













1 Comments