தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8,002 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் 4,273 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 798 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில், 538 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 97 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேர், அரியலுார் மாவட்டத்தில் 33 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2.43 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8,002 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,421 பேர் ஆண்கள் என்பதுடன், 2,579 பேர் பெண்கள் மேலும் இரண்டு திருநங்கையர்களும் உள்ளடங்குவர்.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. 70,756 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 2,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..