எதிர்வரும் 21ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழ இருக்கின்றமையினால், திருப்பதி ஏழுமலையான் ஆலயம், 13½ மணிநேரம் மூடப்படவுள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருமலையிலுள்ள அன்னமயபவனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைபேசி ஊடாக குறைகள் கேட்கும் முகாம் இடம்பெற்றது
இதன்போது குறித்த நிகழ்வில், திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இணையத்தில் முன்பதிவு செய்யும் 300 ரூபாய் பற்றுச்சீட்டு பக்தர்கள் முன்கூட்டியே திருமலைக்கு வந்து அவதிப்பட வேண்டாம். தரிசன நேரத்துக்கு வந்து ஏழுமலையானை வழிபடலாம்.
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தைப் பற்றி சிலர் அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தேவஸ்தானத்தைப் பற்றி அவதூறு பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 8ஆம் திகதியில் இருந்து ஏழுமலையான் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது தினமும் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன்65 வயதுக்கு மேலும் 10 வயதுக்குட்பட்டோருக்கும் சாமி தரிசன அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி, சூரிய கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் காலை 10.18 மணிக்கு தொடங்கி மதியம் 1.38 மணிக்கு முடிகிறது.
ஆகையால் முன்கூட்டியே, எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 1 மணிக்கு ஆலயத்தில் நடை அடைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..